Wednesday, January 08, 2014

ஊடக எல்லை மீறல் ௐர் பாா்வை

முஹம்மது காமில்.உலக நவீனமாதலில் ஊடகங்களின் பயன்பாடு மிகவும் அவசியமாகின்றது மிகப்பிரதானமாக சொல்லுமிடத்து இணையத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த வேளையில் சில இனவாதிகள் தங்களது இனவாத நச்சுக்கருத்துக்களை இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கருத்துக்களாக நவீன ஊடகங்கள் தொடர்பு சாதனங்கள் மூலம்  பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இன்று எமது இலங்கை தீவைப்பொருத்தவரையில் எமது முஸ்லிம் சமூகம் பௌத்த பேரினவாத சதிவலைக்குள் உட்பட்டு நாள்தோறும் பல்வேறுபட்ட குழப்பங்கள் பிரச்சினைகள்,பழிவாங்கல் போன்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு பெரும்பாலான இன்னல்களை அனுபவித்து வருகின்றது.

இன்றைய நிலையில் இலத்திரனியல் ஊடகமானது பெரும்பாலான மக்களை ஒரே நேரத்தில் சென்றடைவதிலும் மேலும் மக்கள் மத்தியில் அதன் தாக்கத்தை உடன் ஏற்படுத்துவதிலும் பெரும் பங்கை வகிக்கிறது.

இன்று உலகம் அறிவியலில் வெற்றி இலக்கை நோக்கி வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  செய்தி ஊடகங்கள் என்பது இணையத்தில் மட்டுமில்லை. வானொலி, தொலைக்காட்சி, தினசரி, வாரம், மாதப்பத்திரிகைகளாகவும், பலதுறைகளைப் பற்றிய செய்தித் தொகுப்பாகவும் மற்றும் தனி மனிதர்களின் புத்தக வெளியீடாகவும் விரிவடைந்து ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சியுள்ளது.

தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம், அச்சு ஊடகத்துறை மற்றும் மின்னணு ஊடகத்துறை என்று எல்லாத் துறைகளிலும் விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கும் சாதனை உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே சுற்றி வளைத்து உங்கள் விரல் நுனியில் தந்துள்ளது ஊடகத்தின் உச்சானி கொம்பாக இருக்கின்ற இணைய தளம். கல்வி, வியாபாரம், வர்த்தகம், விளையாட்டு,விளம்பரம், தகவல் தொடர்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம், இராணுவம் மற்றும் ஆராய்சி என பல்வேறு துறைகளில் தனதுஆதிக்கத்தை முழுவீச்சுடன் செலுத்தியுள்ளது.

இன்று ஊடகத்தின் வளர்ச்சி எல்லோருக்கும் கிடைக்கும்படியும் அமைந்துவிட்டது, சிறிது தொழில்நுட்பம் தெரிந்தால் கூட நமது கருத்துக்களை உலகத்தின் பலபாகங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். அதற்க்கு துணையாக குறிபிட்டு சொல்லுமிடத்து Facebook,Youtube,Twitter இன்னும் எத்தனையோ சமூக வலைத்தளங்கள் இனைய உலகில் நிரம்பி வழிகின்றன ஆனால் இஸ்லாமிய சமுதாயம் ஊடகவலையில் இன்னும் உறங்கி கொண்டுதான் இருக்கிறது. இதனால் இஸ்லாம் பல கோணங்களில் தவறாக பரப்பப் படுகிறது, மேலும் களங்கப்படுத்தப் படுகிறது, காரணம் இன்று ஊடகம் இனவாத ஆதிக்க சக்திகளாலும் பாசிசத்தாலும் ஆக்கிரகிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையாக முஸ்லிம்கள் இருந்தும் சொல்லிக் கொள்கிற மாதிரி செய்தி ஊடகங்களில் முஸ்லிம்கள் முன்னேற முடியாமல் மூலையில் முடங்கிக்கிடக்கிறார்கள். கல்வியில் முன்னேறாத சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கும் போது, ஊடகங்களில் எப்படி முன்னேற முடியும்? மாற்றார்களால் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படும் போது அதே அதே ஊடகங்களைக்கொண்டு (மீடியாவைக்) கொண்டு பதில் தாக்குதல் எம்மால் எப்படிக் கொடுக்கமுடியும்?

இன்றைய உலகில் பெரும்பாலான ஊடங்கங்களும் செய்திச் சேவைகளும் இனவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளதினால் அவர்களது முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை  தங்களது ஊடகங்கள் மூலம்  தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை ஒரு பிரச்சாரமாகவே மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ‘முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டிய தீவிரவாதிகள்' என்ற மதவெறிக் கருத்தை இவை வெளிப்படையாக மக்களிடையே பரப்புகின்றன.

இஸ்லாத்திற்கு எதிரான பனிப்போர் மிகவும் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது, குறிப்பாக மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துப்போரில் முழுவீச்சுடன் செயல்படுகின்றனர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. நாளொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தொலைகாட்சி பார்ப்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் சுலபமாக விழ வைத்திருக்கிறார்கள்.

ஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியை பார்ப்பதில் கழிக்கிறான். அமெரிக்காவில் கணிசமான குழந்தைகள் சராசரியாக வாரம் ஒன்றிற்கு 25 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் குறிப்பிடுகிறது.

ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற ஊடகம், இன்னொரு பக்கம் தீவிரவாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், தீவிரவாதிகள், பிற்போக்கு வாதிகள் என்றும் பாசிசவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனையே உலக அளவில் அமெரிக்காவும், பிரிட்டனும் சி.என்.என், பி.பி.சி போன்றவற்றின் உதவியுடன் முன்வைக்கிறது அதே போல்தான் இலங்கையிலும் முஸ்லிம்கள் தொழில் நிமித்தம் அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள் அவர்களுக்கென்று ஒரு வரலாறு இல்லை என்று பொது பல சேனா , மற்றும் ரவாயா போன்ற இனவாத அமைப்புகள் கொக்கரித்து திரிகின்றனஅதற்க்கு அரச ஊடகங்கள் கூட ஆதரவு தருகின்றன அது தான் புரியாத அதிசயம்.சில சமயம் முஸ்லிம்களை இந்த நாட்டின் பூர்வீக குடியுரிமை அற்றவர்கள் என்று கூட இவ்வமைப்புகள் விவாதிக்கின்றன.

முஸ்லிம்களைப்பற்றி சில இனவாதிகள் தமது சமூகத்தின் மத்தியில் நச்சுக்கருத்துகளை விதைக்கின்றனர் அதன் மூலம் இஸ்லாத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் அவப்பெயரை ஏற்ப்படுத்தி  "முஸ்லிம் தீவிரவாதிகள்", "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்" என்று போற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை. இதற்க்கு சான்றாக அண்மையில் மியன்மாரில் பௌத்த இனவாதிகளால் கொன்று குவிக்கப்பட்ட இலட்சோபலட்சம் முஸ்லிம்களுக்கு ஆதராவாக எந்த ஊடகமோ சர்வதேச அமைப்புகளோ குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சொல்லப்போனால் உதாரணமாக இந்தியாவிலும் உலகளவிலும் வெளியிடப்படும் திரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா. அவன் எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், தேச துரோகி பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல்அவதூறான களங்கத்தைச் சுமத்திச் சென்றுவிடுகிறார்கள்.இப்படி செய்வதன் மூலம் அவர்களது சமூகத்துக்கு முஸ்லிம்கள் பற்றி தவறான ஒரு நிலைப்பாட்டினை ஏற்ப்படுத்துவதே இவர்களின் குறிக்கோள் அதிலும் அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
எம்மில் யாராவது இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா? நிச்சயமாக இல்லை.

அண்மையில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் நிகாப் இற்கு எதிரான தடை,யாராவது எந்த ஊடகமானது அந்த செய்திகளை சர்வேதேச சமூகத்துக்கு முன் கொண்டு சென்றதா? ஆனால் அனுராதபுரத்தில் பௌத்த புனிததலத்தை பார்வையிட சென்ற யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் பர்தாக்களை அகற்றியதன் பின்தான் அனுமதி என்று கூறிய நிருவாகமும் அதற்க்கு இசைந்த மாணவிகளும் இந்த செய்தியை ஆங்கில இணையத்தளங்கள் கூட பெரிதாக வெளியிட்டன. முஸ்லிம் பெண்களுக்கு பர்தா பாதுகாப்பு என்கிறது இஸ்லாம். இல்லை பழமைவாதம் என்கிறார்கள் பௌத்த மற்றும் இந்து இனவாதிகள்.
நாம் உண்டு நமது வேலை உண்டு என்றிருந்தால் ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துப்போரில் வாள் வீசுவது யார்? சற்று சிந்தனை செய்யவேண்டாமா?
இன்று ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கெதிரான அவர்கள் செய்யும் பனிப்போரில் உச்சகட்டத்தை அடைந்துயிருக்கின்றார்கள் என்றால் யார் காரணம்? நாமல்லவா சகோதரர்களே!

இப்போதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்துகொண்டு இருக்கின்றன. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்தைப் பரப்புவதில் யூத, அமெரிக்க அமைப்புகளும் இந்தியா மற்றும் எமது நாட்டில்  மதவெறியர்களின் கைப்பாவையாகச் செயல்படும் சில ஊடகங்களும் முழு மூச்சாக இயங்குகின்றன.
ஈராக் ,ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் தற்கொலைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், பணயக் கைதிகள் கொல்லப்படுவது போன்ற வெறிச்செயல்களை இஸ்லாத்தின் பெயரால் சித்தரிக்கப்படுகின்றன இதை மத அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் எந்த முஸ்லீமும் ஏற்றுக்கொள்வதில்லை.
உலக வர்த்தகமையக் கட்டடத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாகட்டும், இஸ்ரேலின் இயந்திரத் துப்பாக்கிக்கு பலியாகும் பாலஸ்தீனர்களாகட்டும், வான் தாக்குதல்களில் கொல்லப்படும் ஈராக் முஸ்லிம் ஆகட்டும், வேதனையும் மரணமும் எல்லோருக்கும் ஒன்றுதான். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.

இன்று எமது முஸ்லிம் சமூகத்துக்கும் உடன் பிறப்புகளுக்கும் எதிராக ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா,பலஸ்தீன போன்ற நாடுகளில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் மற்றும் யூத சியோனிச வாதிகள் மூலம் அரங்கேறும் எத்தனையோ கொடுமைகள் ஊடகங்களின்  பாரபட்சத்தின் மூலம் மறைக்கப்பட்டு வெளியுலகுக்கு அங்கு கொல்லப்படும் இராணுவ வீரர்கள் மாத்திரம் காட்டி முஸ்லிம்களை தீவிர வாதிகளாக சித்தரிக்கின்றன.

இன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் நடக்கும் வன்செயல்கள், அராஜகங்கள், தீவிரவாத செயல்கள், மனித நேயத்திற்கு முரணான செயல்கள் இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். முஸ்லிம்கள் மட்டும்தான் அச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? இல்லையே!
ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களிலும் இப்படியொரு அராஜாக - மிருகவெறி கொண்ட கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த, ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஒரு போதும் ஈடுபடமாட்டார். தற்கொலை செய்து கொண்டு தன்னை மீளா நரகில் கொண்டு சேர்க்க ஒரு போதும் முற்படமாட்டார். தீமையை தீமையைக் கொண்டு தடுக்க முடியும் என்று அல்குர்ஆன் சொல்லவில்லை. தீமைகளை நன்மைகளைக் கொண்டே முறியடியுங்கள் என்றே குர்ஆன் போதிக்கிறது.

சோவியத் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமே பெரிய எதிரியாகத் தெரிகிறது. காரணம் அங்கெல்லாம் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. இஸ்லாம் தங்கள் நாடுகளை ஆட்கொண்டு விடுமோ என அஞ்சுகிறார்கள் அதே நேரம் அரபு நாடுகளைப் பொறுத்த வரையில் அங்கு நிலையாக உள்ள எண்ணெய் வளம் இவர்களது எதிர்ப்பு நடவடிக்கைக்கு பிரதான காரணம் ஆகும்  எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைப் போட வேண்டும் என்ற தீய நோக்கோடு, அனைத்து ஊடகங்களும் அமெரிக்க, யூத பணத்திற்கு அடிமையாகி அவர்கள் கொடுக்கும் செய்திகளை அப்படியே மாறி மாறி ஊடகத்தின் மூலமாக பரப்பி வருகின்றன.


இன்றைய உலகத்திலும் நம்முடைய இலங்கைத்தீவை பொறுத்த வரையிலும் ஒரு முஸ்லிம் அரச துறைகளில் உயர்பதவிகளில் இருந்தால் அவரை பதவியைக் கொண்டு பார்க்காமல் முஸ்லிமாகப் பார்க்கவே இச்சமூகம் தலைபடுகிறது. இதற்க்கு உதாரணமாக ஈராக்,லிபியா,ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில் சமாதானத்தின் பெயரால்  நடைபெற்ற மனிதப்படுகொலைகள் மற்றும் இந்தியாவில் குஜராத்தில் ஏற்ப்பட்ட மதக்கலவரங்களை விசாரிக்க இதுவரை ஒரு முஸ்லிம் அறிஞ்சர், நீதிபதிகூட நியமிக்கப்பட்டதில்லை. அதே நேரம் எமது ஊர்களில் நடைபெற்ற இனப்பிரச்சினை மற்றும் பள்ளிவாசல் உடைத்தல் சம்பவங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் போற்றவற்றை கூட குறிப்பிட்டு சொல்லலாம்.இதற்கு பிரதானமாக பேரினவாதிகள் குறிப்பிடும் ஒரு காரணம், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் ஆதரிப்பார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. இதுதான் பாரபட்சத்தின் ஆணிவேர் இவர்களுக்கான கூலி நிச்சயமாக இறைவனிடத்தில் உண்டு.
இனவாதிகள் எல்லோரும் நீதிமான்கள் என்பது போலவும், முஸ்லிம்கள் மட்டும் மதவெறியர்கள் என்பது போலவும் ஒரு மோசமான கருத்து இங்கு விதைத்து வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதிகளவில் முஸ்லிம்கள் ‘குற்றவாளி'களாகவும், பாசிசவாதிகள் ‘நீதிமான்'களாகவும் உள்ளனர்.
இருந்த போதிலும் இப்படிப்பட்ட எமது நாட்டில் பௌத்த பேரினவாதிகள், மத வெறியர்கள் அவர்களின் சமூகத்தின் முன்  சொல்லும் பிரதானமான கருத்து முஸ்லிம்கள் அனைவரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் அதுமட்டுமல்லாது எமது மக்களின் சொத்துக்களை வியாபரத்தின் மூலம் கொள்ளை அடிக்கின்றனர்  என்கின்ற மாயத்தோற்றத்தை  பொது மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள்.

ஒரு நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் அரசு, அரசு அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் இந்த நான்கும் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நிலைகுலைந்தால் நாட்டில் மதவெறி, திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, தீவிரவாதம் என அனைத்து அராஜகங்களும் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று இந்த நான்கு தூண்களும் பேரினவாதத்துக்கு அடிமையாகிக் கிடக்கின்றன.

இல்லாததைத்ப் பற்றி திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள்.அதே போல்தான்  இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள். துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா (தொடர்புசாதன ஊடகம்) என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை. அதே நேரம் இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லைஅப்படி வந்தாலும் எம்மிடையே இருக்கின்ற பல்வேறு பட்ட பிரிவினைகள் மூலம் அவர்களை நாம் ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை.இதன் காரணத்தினால்  இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிறருக்கு சொன்னால் போதும் என்கின்ற மனநிலையில் பெரும்பான்மையினர் ஒதுங்கிவிடுகின்றனர்.

இந்த நிலையில் இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் சமூகத்தை இந்த அழிவு பாதையிலிருந்து பாதுகாப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆகவே நாம் இதிலிருந்து விரைவில் விழித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய மிகக் கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் எம் சமூகத்து எதிராக நடந்து கொண்டிருக்கும் நடக்க இருக்கும் அநீதிகளில் இருந்து எமது சமூகத்தை பாதுகாத்து அருள்புரிவானாக அதே நேரம் எமது சமூகத்தின் மத்தியில் ஒற்றுமையை உண்டு பண்ணுவானாக,எமது சமூகத்துக்காக குரல் கொடுக்கும் ஊடகங்கள்,கல்விமான்கள்,அறிஞ்சர் பெருந்தகைகளை எமது சமூகத்தில் ஏற்ப்படுத்தி தருவானாக..

ஆமீன்.ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!!
அல்ஹம்துலில்லாஹ். 

0 comments:

Post a Comment