Wednesday, August 06, 2014

இஸ்ரேலின் தாக்குதல் மகா கொடூரமானது ஜிம்மி கார்ட்டர் (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி)

இஸ்ரேலின் தாக்குதல் மகா கொடூரமானது, மனித நேயமற்றது
- ஜிம்மி கார்ட்டர் (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி) பாய்ச்சல்
வாஷிங்டன்:

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல் எந்த வகையிலும் நியாயமானதே அல்ல. அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ள விதம் மனிதநேயற்றது. மனிதப் பேரழிவை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் கூறியுள்ளார். இரும்பாகிப் போன மனதுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது கண்டனத்துக்குரியது என்றும் கார்ட்டர் கண்டித்துள்ளார். விரைவில் முழுமையான, சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டறிக்கை
கார்ட்டரும், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன் ஆகியோர் இணைந்து இதுதொடர்பாக எழுதியுள்ள கட்டுரையில், இஸ்ரேல் தாக்குதலில் நியாயமே இல்லை. மிருகத்தனமான தாக்குதல் இது. அக்கிரமமானது, சட்டப்பூர்வமானது அல்ல. மனிதாபிமானமே இல்லாமல் தாக்கியுள்ளனர்.
காஸாவை சாம்பலாக்கி விட்டனர்
காஸாவின் பல பகுதிகளை தரை மட்டமாக்கியுள்ளது இஸ்ரேல். அங்குள்ள மக்களை கொத்துக் கொத்தாக கொன்றுள்ளன். ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் கூட அவர்கள் விடவில்லை.
மனிதப் பேரழிவு
ஒரு மனிதப் பேரழிவு நடந்துள்ளது. இரண்டரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகியுள்ளனர். குடிநீர் இல்லை, மின்சாரம் இல்லை.
மன்னிப்பே கிடையாது
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு மன்னிப்பே கிடையாது. இவை போர்க்குற்ற செயல்கள். அதில் சந்தேகமே இல்லை. அதேபோல இஸ்ரேலின் அப்பாவி மக்கள் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதலும் கண்டனத்துக்குரிய ஒன்றுதான்.
சர்வதேச விசாரணை - கடும் தண்டனை
இஸ்ரேலின் தாக்குதல், போர்க்குற்றம் குறித்து சர்வதேச அளவில் பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணை தேவை. குற்றம் செய்தவர்களை சர்வதேச சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
பாலஸ்தீனத்தை அங்கீகரியுங்கள்
முழுமையான, சுதந்திரமான பாலஸ்தீனத்தை உருவாக்க வேண்டும். அதை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.
ஹமாஸையும் அங்கீகரியுங்கள்
அதேபோல ஹமாஸ் அமைப்பை ஒரு ஆயுதக் குழுவாக மட்டும் பார்க்காமல், அரசியல் சக்தியாக பார்க்க வேண்டும். ஹமாஸுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் அங்கீகாரம் தர வேண்டும்.
ஹமாஸை அழிக்க முடியாது
ஹமாஸை அழிக்க முடியாது, ஒதுக்கவும் முடியாது. அவர்களை அரசியல் சக்தியாக அங்கீகரித்தால் மட்டுமே அவர்களையும் பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்த முடியும். அவர்களும் ஆயுதங்களைப் போட்டு விட்டு வருவார்கள்.
காஸா தடையை இஸ்ரேல் விலக்க வேண்டும்
காஸா மீதான தடையை இஸ்ரேல் நீக்க வேண்டும். காஸா மக்களுக்கு உணவுப் பொருள் உள்ளிட்டவை கிடைக்க போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் நீக்கப்பட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே பாலஸ்தீனத்தில் குறிப்பாக காஸாவில் நிரந்தர அமைதி திரும்பும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
நன்றி : தட்ஸ் தமிழ்
பலஸ்தீன் ‪#‎படலம்‬...

0 comments:

Post a Comment